அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

அழியா நினைவுகள்

நீரோட்டமாய் உந்தன்
நினைவோட்டம்
மனதை சுண்டி இழுக்க!
நெஞ்சமோ
காதல் மரக்கலம் பற்ற
நினைவலையில்
தொடங்கியது பயணம்!

செங்கதிர் குமிளும் அந்தி
நாவாயில் துயிலும் நீ!
மெய்மறந்து நான் இரசிக்க!
குறும்புக்கார தென்றல்
வாடையாய்
உன் முகந்தழுவ!
பிரிந்தது இமைகளா?
இல்லை
மின்காந்த இழைகளா ?
பார்வை தீண்டியதும்
பாயுதடி மின்சாரம் என்னுள்!

விழியோடு விழி கலந்து
விரலோடு விரல் கோர்த்து
இதழோடு இதழ் சேர்த்து
தோள்மீது உனை சாய்த்து
நாவாயில் நாம் கொஞ்ச
அந்த வான்மகளும்
வெட்கப்பட்டே மறைந்தாள்
நம் காதலின் நெருக்கம் கண்டு!

காதலின் சுமைதனில்
விழிகள் பனிக்க
மீண்டு வந்தேன் நிகழ்காலத்துக்கு!
நினைவலைகள் அடங்கினாலும்
யுகங்களே கடந்தாலும்
உந்தன் நினைவுகள் மட்டும்
என்னில் நீங்காதே!

No comments yet. Be the first.

Leave a reply