August 23, 2011
நட்பின் நினைவு
தனிமையின் அமைதியில்
கடந்த கால நினைவுகளில்
சிறிது நேரம் கரையவிட்டேன்
மனதினை….
சின்ன சின்ன சண்டைகள் …
காரணம் தெரியாத கோபங்கள் ..
சிலநேர மௌனம்
பலநேர நெருக்கம்
மனத்திரையில் தோன்ற
முகிலும் சிந்தியது கண்ணீர்..!
முதன் முதலாய் உணர்ந்தேன்
குடைபிடிக்கும் உன் கரங்கள்
அருகிலில்லை என்பதினை…
வலிகளை…
காயங்களை…
கண்ணீரை…
உலகினின்று சாமானியமாய்
மறைத்த என் மனது…
ஏனோ..!
எப்படி மக்கா இருக்க?
என நீ கேட்கும் போது மட்டும்
எனை கேளாமலேயே
என் துன்ப உளறல்களை
உன் வசம் சேர்க்கும் வேளைகளில்
தோள்சாய்த்து
தலைகோதி நீ
தந்த ஆறுதல் மொழிகளில்
உயிர் சிலிர்த்துப்போனதுண்டு
உன் தோழமையின்
ஆழம் கண்டு….
தேவையில் அரவணைத்து
துன்பத்தில் துணை நின்று
மகிழ்ச்சியில் உடன் மகிழ்ந்து
தன்னலம் மறந்து
எனை எனதாகவே
இருக்கச்செய்த நட்பே
கால சக்கரத்தில் சிக்கி
வெவ்வேறு திசைகளில்
நாம் சிதறி இருந்தாலும்
என்றுமே என்மனதில்
நீங்காது நிறைந்திருக்கும்
நம் நட்பின் நினைவுகள்…
புரிந்த நட்பிற்கு
தொலைவும் தூரமில்லை…
பிரிவும் நிரந்தரமில்லை…
என்ற நம்பிக்கையில்
நம் நட்பின் நினைவுகளில்
புதைந்த மனதினை
மீண்டும் இழுந்துவந்தேன்
நிகழ்காலத்திற்கு….